Jul 21, 2026 - 03:09 PM -
0
கண்டி, தெல்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கலஹா, மல்பேரி மற்றும் அப்பர் கலஹா கிராமங்களில் வாழும் மக்கள் நேற்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'டித்வா' புயலால் பாதிக்கப்பட்டு ஏழு மாதங்கள் கடந்தும், இதுவரை அப் பிரதேசத்தில் மக்களுக்கு உரிய காணிகளைப் பெற்றுத்தரவில்லை எனக் கூறி, கலஹா குரூப் பாலத்திற்கு அருகில் மக்கள் பேனர்களை ஏந்தி, கோஷமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்புயலினால் 29 குடும்பங்களின் வீடுகள் பாதிக்கப்பட்டு, தற்போது அவர்கள் வேறு வீடுகளில் வாடகைக்குத் தங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு உடனடியாக உரிய காணிகளை அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் தாம் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் மக்கள், தாம் ஏற்கனவே வாழ்ந்த பிரதேசத்திலேயே காணிகளைத் தருமாறு வலியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
--
