Jul 23, 2026 - 11:02 AM -
0
மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை ஆறாம் கட்டை மற்றும் ஏழாம் கட்டைப் பிரதேசங்களில் கடந்த சில வாரங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களை அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யானை வேலிகள் உடைக்கப்பட்டு, யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைவதால் உயிர் மற்றும் சொத்துச் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துரையாடியதன் அடிப்படையில், நேற்று (22) பிற்பகல் முதல் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து இரண்டு விசேட கண்காணிப்பு அணிகள் நியமிக்கப்பட்டு யானைகளை விரட்டும் தற்காலிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரவு 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும், யானைகள் தென்பட்டால் அருகில் செல்லாமல் உடனடியாக வனஜீவராசிகள் அலுவலகத்திற்குத் தகவல் வழங்குமாறும், டொர்ச் (Torch), பட்டாசு போன்றவற்றைத் தனியாகப் பயன்படுத்தி யானைகளை விரட்ட முயற்சிக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேநேரம், இதற்கான நிரந்தரத் தீர்வாக இந்த யானைகளை மாவட்ட எல்லையைக் கடந்து அனுப்புவதற்கான நடவடிக்கைகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் என மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
--
