Jul 30, 2026 - 10:59 AM -
0
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே அறிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை செலுத்திய ரஹானே, 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 8,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டுள்ள ரஹானே, 2020 - 21 பார்டர் கவாஸ்கர் கிண்ண தொடரில், பல முக்கிய வீரர்கள் இல்லாதபோதும், அவுஸ்திரேலிய மண்ணில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெற வைத்தது அவரது கிரிக்கெட் வாழ்வில் சிறந்த தருணமாக அமைந்தது.
கடைசியாக இந்திய அணிக்காக மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்தின் போது 2023 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியில் விளையாடினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் கடைசியாக 2018 ஆம் ஆண்டிலும், டி20 போட்டியில் 2016 ஆம் ஆண்டிலும் விளையாடியிருந்தார்.
தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “தொப்பி எண் 278 விடைபெறுகிறது. இத்தனை ஆண்டுகள், நீங்கள் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைவருக்கும் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “நேரம் வரும்போது அதை மதித்து முன்னேற வேண்டும். எனது 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. மும்பையில் பிறந்த ஒரு இளைஞராக இந்திய அணிக்காக விளையாடியது பெருமையாக கருதுகிறேன். ஒவ்வொரு முறை விளையாட களத்தில் இறங்கும்போதும், அணியின் நன்மையை முன்னிறுத்தி நேர்மையாக விளையாடினேன்” எனத் தெரிவித்தார்.
மேலும், ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட முன்னணி அணிகளுக்காக விளையாடியுள்ள ரஹானே, கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
