Jul 30, 2026 - 11:56 AM -
0
திமுக எம்.எல்.ஏ. ஓ. பன்னீர்செல்வமும் அவரது மகன் ஓ.பி. ரவிந்திரநாத் ஆகிய இருவரும் திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இதனை மறுத்து, இது தவறான தகவல் என தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்துவந்த ஓ. பன்னீர்செல்வம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அங்கு ஏற்பட்ட கோஷ்டி பிரச்சனை காரணமாக கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு எனும் அமைப்பை வைத்து, அதிமுகவை மீட்கப்போவதாக தெரிவித்து வந்தார்.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு அந்த அமைப்பை கலைத்துவிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார் ஓ. பன்னீர்செல்வம்.
இந்தத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று கூட்டணி ஆட்சி அமைத்து, கூட்டணி கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுத்தது. இதேபோல், இந்தத் தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவின் எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களில் சிலரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், திமுகவில் தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என மனவருத்தத்தில் இருந்து வருவதாகவும், இதன் காரணமாக தனது எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஓ. பன்னீர்செல்வம் இணைய இருக்கிறார் என தகவல்கள் பரவிவந்தன.
இந்த விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளான நிலையில், இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், “நான் தவெகவில் இணைய இருப்பதாக வெளியாகும் தகவல்கள் தவறானவை.
ஒரு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு ஒரு கட்சியில் இணைந்து அங்கு எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். இந்த நிலையில், தற்போது வெளியாகி வரும் செய்திகள் உண்மை இல்லை” எனத் தெரிவித்தார்.
