Jul 30, 2026 - 09:21 PM -
0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையிலிருந்த தலைமை தலைமை சிறை அதிகாரி இன்று (30) நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.
நீர்கொழும்பு நீதவான் ஷிலனி பெரேரா முன்னிலையில் அவர் சாட்சியமளித்தார்.
சம்பவத்தின் போது நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரியாகப் பணியாற்றிய விக்ரம ஜயந்த குமார என்பவரே இவ்வாறு சாட்சியமளித்துள்ளார்.
பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட சாட்சியப் பதிவு, பிற்பகல் 3.00 மணி வரை நீடித்துள்ளது.
சாட்சியத்தைப் பதிவு செய்த பின்னர் கருத்து தெரிவித்த நீதவான், தலைமை சிறை அதிகாரி அளித்த சாட்சியத்தில் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தகவல்கள் உள்ளடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
அத்தகவல்கள் வெளிவரக் கூடுமாயின் நாட்டின் தேசிய பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், அச்சாட்சியின் உள்ளடக்கங்களை எந்தவொரு ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அச்சாட்சியத்தைப் பாதுகாப்பாக வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்ற 89 சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கையொன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பான அறிக்கையொன்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
