Jul 31, 2026 - 09:27 AM
வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் 20 லட்சம் ரூபா பெறுமதியான 16 கிலோகிராம் கேரள கஞ்சாப் பொதிகள், யாழ்ப்பாண மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அரச புலனாய்வுச் சேவையினருக்குக் (SIS) கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்டவிரோதக் கேரள கஞ்சா கொழும்புப் பகுதிக்குக் கைமாற்றப்படவிருந்த நிலையில், அரச புலனாய்வுச் சேவையினரின் விரைவான நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தின் பின்னணியில் பிரபல அரசியல் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், இந்த வாரம் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாகப் பருத்தித்துறை வல்லிபுரம் கடற்கரைப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட 250 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாத் தொகையில் ஒரு சிறு பகுதியே தற்போது நெல்லியடியில் பிடிபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

