Aug 1, 2026 - 03:47 PM
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடப்பதே தமது இலக்கு என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தக அதிகாரிகளைச் சந்தித்த போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கையின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் திறமையான வேலை வாய்ப்புகளை மேலும் வலுவாக ஊக்குவிப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களை மறுசீராய்வு செய்வதும், உத்திகள் சார்ந்த முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதும் இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த 23 சந்தைகளில் நிறுவப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்களில் பணியாற்றும் வர்த்தக அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர், சர்வதேச சந்தையில் இலங்கையின் வர்த்தகம் மற்றும் பரந்த பொருளாதார நலன்களை முன்னோக்கி கொண்டு செல்வதில் அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
சந்தை அபிவிருத்தி, ஏற்றுமதி ஊக்குவிப்பு, முதலீட்டு வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் சர்வதேச வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றினூடாக அளவிடக்கூடிய பெறுபேறுகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 36 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் கடப்பது உள்ளிட்ட தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் இலக்குகளுடன் தங்களது நடவடிக்கைகளை சீரமைக்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

