Aug 2, 2026 - 07:36 AM
2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ கூடாது.
மேலும், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவது அல்லது அவ்வாறானவற்றைத் தம்வசம் வைத்திருப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

