Sep 10, 2026 - 10:29 AM

பொகவந்தலாவ, சிங்காரவத்தை தோட்டப் பகுதியில், பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தேயிலை மலையில் நேற்று (09) காலை பாரிய சிறுத்தைப் புலி ஒன்று இனம் காணப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, குறித்த பகுதியில் வேலைக்குச் செல்லும் பொதுமக்களும், பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அச்சத்தில் உள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 07 ஆம் திகதி காலை வேளையில், குறித்த சிறுத்தைப் புலி தேயிலை மலையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்ததை பொதுமக்கள் இனம் கண்டு, தமது கையடக்கத் தொலைபேசியில் அதனை புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நல்லதண்ணீர் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொகவந்தலாவ தெரேசியா தோட்டப் பகுதியில் கடந்த வாரம் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி, டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இந்தப் பகுதியில் சிறுத்தைப் புலியின் நடமாற்றம் காரணமாகப் பல வளர்ப்பு நாய்களும் காணாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த விடயம் குறித்து வனவிலங்கு அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிங்காரவத்தை தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





























