Sep 19, 2026 - 03:22 PM

2026 செப்டம்பர் 15ஆம் திகதி முதல் தனக்கு எதிராக வெளியிடப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக நிராகரிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தக் குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
குறித்த விடுதலைப் புலிகள் உறுப்பினரான “தம்பியன்” என அழைக்கப்படும் நபர், கடந்த காலங்களில் எனது அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டதுடன், எமது சமூகத்திற்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டவர்.
எனவே, அவர் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துகள் பிழையானவை அவை அப்பட்டமான பொய்கள், ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் தெளிவினை வழங்கும் விஷேட ஊடக சந்திப்பு இன்று (19) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”முறையான மற்றும் தகுந்த சான்றுகள் எதுவுமின்றி, வெறும் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இத்தகைய செயற்பாடுகள் மூலம் பல்வேறு நோக்கங்களைக் கொண்டு நடத்தப்படும் பிரசாரங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெளிவாகிறது.
முன்னரொரு சந்தர்ப்பத்திலும், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் என்னை இணைத்துப் பேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அக்காலகட்டத்தில் நான் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் விடுவிக்கப்பட்டேன்.
அச்சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு, எனக்கு எதிராக எவ்வித சான்றுகளும் இல்லை என அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு தொடர்பான விசாரணைகளின் போதும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது. நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீவிரவாதத்திற்கோ அல்லது பயங்கரவாதத்திற்கோ ஆதரவளித்ததில்லை என்பதையும், அத்தகைய எந்தவொரு நடவடிக்கைகளிலும் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதையும் மிகவும் பொறுப்புடன் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன்.
வெளியிடப்பட்டுள்ள பொய் தகவல்களைப் பயன்படுத்தி எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயல்பவர்களுக்கு எதிராக, சட்டக் கட்டமைப்புக்கு உட்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன்.
நமது நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால், அது சான்றுகளின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும். ஊடக செய்திகள் அல்லது ஆதாரமற்ற பிரசாரங்களின் அடிப்படையில் ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுவது பொருத்தமானதல்ல.
நான் சட்டத்தை மதிக்கும் ஒரு நபர், மேலும் எந்தவொரு சட்டபூர்வமான விசாரணைக்கும் எனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருக்கின்றேன். இருப்பினும், ஆதாரமின்றி எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தின் முன் எனது உரிமைகளுக்காக நான் குரல் கொடுப்பேன்.
இறுதியாக, இத்தகைய உணர்திறன் மிக்க விடயங்களில் ஊடகங்களும் பொதுமக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் செயல்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்





























