Dec 28, 2024 - 06:26 PM -
0
இன்று (28) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 383 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 8,392 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1382 சாரதிகள், அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணித்த குற்றங்களுக்காக 690 சாரதிகள், அதிக வேகத்தில் பயணித்த 98 சாரதிகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 59 சாரதிகளுக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த 23ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

