Jan 14, 2025 - 05:23 PM -
0
புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மங்கள எளிய, வீஹேன்கட்டுவ பகுதியில் கடந்த 12 ஆம் திகதி சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிங்கபுலி ஹேனயலாகே ரஸ்மி லக்ஷிகா ரணவீர (வயது 15) எனும் சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அவரது தந்தை குருநாகலில் வசித்து வருகின்றார்.
சிறுமி தனது அம்மம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற போது, சிறுமியின் அம்மம்மாவும், அவரது கணவரும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்திற்கு செல்வதற்காக தயாராகி குறித்த சிறுமியையும் அழைத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
எனினும் தனக்கு உடல் நிலை சரியில்லை எனத் தெரிவித்துள்ள அந்த சிறுமி, தான் ஓய்வெடுக்க வேண்டும் எனவும், இருவரையும் ஆலயத்திற்கு செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் அம்மம்மாவும், அவரது கணவரும் ஆலயத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வருகை தந்த போது சிறுமி உறங்கும் அறை பூட்டப்பட்டிருப்பதை அவதானித்து அந்த அறையின் கதவை தட்டியுள்ளனர்.
எனினும், குறித்த சிறுமியின் சத்தம் எதுவும் இல்லாததால் அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, அந்த சிறுமி தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் பற்றி முந்தல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த முந்தல் பொலிஸார் அங்கு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சம்பவ இடத்திற்கு சென்று அங்கு மரண விசாரணையை முன்னெடுத்ததுடன் சடலத்தை பிரதே பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
காதல் தொடர்பு காரணமாக அல்லது வேறு ஏதும் காரணங்களால் குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--