Jan 16, 2025 - 12:29 PM -
0
நீர்கொழும்பு களப்பு பகுதியில் நேற்று முன்தினம் (14) மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது ஒருதொகை பீடி மற்றும் பீடி இலைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்கு கடற்படை கட்டளையின் களனி நிறுவன கடற்படையினர் நீர்கொழும்பு களப்பு பகுதியில் விஷேட தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த களப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி இயந்திர படகு ஒன்றினை பரிசோதனை செய்தனர்.
குறித்த இயந்திர படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பீடி மற்றும் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த இயந்திர படகில் 29 மூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 864 கிலோ 750 கிராம் பீடி இலைகள் மற்றும் ஒரு மூடையில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகை பீடிகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யும் நோக்கில் இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ள குறித்த பீடி மற்றும் பீடி இலைகள் என்பன கடற்படையினரின் கெடுபிடிகள் காரணமாக கடத்தல்காரர்கள் களப்பு பகுதியில் கைவிட்டு சென்றிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி, பீடி இலைகள் மற்றும் இரண்டு இயந்திர படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
--