Mar 11, 2025 - 12:27 PM -
0
இந்தியாவின் மகாராஷ்டிராவில் மகளிர் தின நிகழ்ச்சியின் பெயரில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மகாராஷ்டிர பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 8 ஆம் திகதி சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பட்டோடாவில் பொலிஸ் கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் (35 வயது) அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணை மகளிர் தின நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறி தற்காலிக காவல் நிலைய கட்டடம் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.
அழைப்பை ஏற்று அங்கு வந்த பெண்ணை தனியான அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சம்பவத்தின் பின் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கான்ஸ்டபிளை அன்றைய தினம் இரவே பொலிஸார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மார்ச் 12 வரை பொலிஸ் காவலில் வைக்கபடுள்ளார். பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு குடும்ப வன்முறை தொடர்பாக புகார் அளிக்க பொலிஸ் கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் பணி செய்து வந்த காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் வந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு அறிமுகமாகி கான்ஸ்டபிள் இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார்.