Mar 20, 2025 - 10:49 AM -
0
கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை தமிழ் இலக்கிய பாட வினாத்தாள் பகுதி ஒன்றை சுமார் ஒன்றரை மணிநேரம் முன்னதாகப் பெற்றதனால் மண்டப இலக்கம் ஒன்றில் பரீட்சைக்குத் தோற்றிய 150 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகமாணவர்களும், பெற்றோரும்,மழைய மாணவர் சங்கத்தினரும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி மத்திய கல்லூரியில் 2024 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் செவ்வாய்க்கிழமை நேற்று (18) தமிழ் பாட பரீட்சை எழுதிய மாணவர்களுக்கே பரீட்சை மண்டபத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தை மட்டுப்படுத்தி ஒரு மணித்தியாலமும் நாற்பது நிமிடங்கள் கால அவகாசம் இருந்தும் அவை மறுக்கப்பட்டு விடைத்தாள்களை பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றிய மேற்பார்வையாளர்களால் பெறப்பட்டுள்ளது.
இதனால் மாணவர் முழுமையாக பரீட்சை வினாக்களுக்கு விடையளிக்க தவறியுள்ளதுடன் மனஉளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் இரண்டு பரீட்சை மண்டபங்களில் பரீட்சைகள் நடைபெற்ற போதிலும் ஒரு மண்டபத்திலே இவ்வாறு அநீதி இடம்பெற்றுள்ளது.
மாணவர்கள் தங்களது புள்ளிகள் மற்றும் பெறுபேறுகள் குறைவடையலாம் என்றும் தமிழ் மொழி பாடமானது மிக முக்கியமானது என்றும் தங்களது எதிர்காலம் இதனால் பாதிப்படையலாம் என்றும் முழுமையாக புள்ளிகளை வழங்குவதன் மூலம் இதற்கான நீதி வழங்கப்பட வேண்டும் என இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெற்றோரும் மாணவர்களும் நீதி கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
--