கிழக்கு
மட்டு. கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்ற பட்டத் திருவிழா

Apr 16, 2025 - 10:16 PM -

0

மட்டு. கல்லடிக் கடற்கரையில் இடம்பெற்ற பட்டத் திருவிழா

2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் பட்டத் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கல்லடிக் கடற்கரையில் நடைபெற்றது. 

இப் போட்டியில் தனியாகவும் குழுவாகவும் போட்டியாளர்கள் பங்குபற்றினர்.இப் போட்டியானது மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் நா. தனஞ்ஜெயன் தலைமையில் இடம்பெற்றது. 

இப் போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார். 

போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசில்கள் அரசாங்க அதிபரின் கரங்களால் வழங்கி வைக்கப்பட்டன. 

முதலாம் இடத்தினைப் பெற்று மட்டக்களப்பு களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த கலாரூபன் குழுவினர் 100,000 ரூபாய் பணப்பரிசினை பெற்றுக் கொண்டதோடு,இரண்டாம் இடத்தினைப் பெற்று மட்டக்களப்பு கலாசார பண்பாட்டுத் திணைக்களத்தைச் சேர்ந்த எஸ்.ரூபேசன் மற்றும் அவரது குழுவினர் 50,000 ரூபா பணப்பரிசை பெற்றுக் கொண்டனர். 

மூன்றாம் இடத்தினைப் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.குலேந்திரன் மற்றும் ரகு குழுவினர் 25,000 ரூபா பணப்பரிசை பெற்றுக்கொண்டனர். 

இப் போட்டியானது புத்தாக்கம், கலை நயம், பிரமாண்டம் மற்றும் எமது பிரதேசத்தின் பாரம்பரியங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலமைந்த கருப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பட்டங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு சுயாதீன நடுவர்களினால் தெரிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதன்போது கலந்துகொள்ளவந்த போட்டியாளர்களுக்கும் ஏற்பாட்டுக்குழுவுக்கும் இடையே வாய்த்தர்க்க நிலைமையும் ஏற்பட்டது. சில போட்டியாளர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ