கிழக்கு
பிள்ளையான் - கம்மன்பில சந்திப்பானது பெரும் அச்சுறுத்தலுக்கான சதித்திட்டம்

Apr 18, 2025 - 11:10 AM -

0

பிள்ளையான் - கம்மன்பில சந்திப்பானது பெரும் அச்சுறுத்தலுக்கான சதித்திட்டம்

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில என்ற கம்மன்பிள்ளை பிள்ளையானுடன் சேர்ந்து இந்த நாட்டில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் இருவரது செயற்பாடுகளின் பின்னால் பெரிய ஒரு சதிதிட்டம் இருப்பதாக கருதுகின்றோம் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார் 

திசைகாட்டி சின்னத்தில் மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் புளியந்தீவு வட்டாரத்தில் போட்டியிடும் முத்துலிங்கம் துதீஸ்வரன் மற்றும் நித்தியானந்தன் நிருஷ்னி ஆகியோரின் தேர்தல் காரியாலய திறப்பு விழா இன்று (17) இடம்பெற்றது இதன்போது அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இவ்வாறு தெரிவித்தார் 

உதய கம்மன்பில கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சட்டத்தரணியாக செயற்படுகின்றார். இவர் பிள்ளையானை நேரடியாக சென்று சந்தித்தது தொடர்பாக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். 

இந்த இருவருக்கும் இடையிலான உறவு என்பது கடந்த காலங்களில் உதயன் கம்பன்வில போன்றவர்கள் இனவாத ரீதியாக இந்த நாட்டை குழப்பும் செயற்பாடுகளை முன்னின்று செயற்பட்டவர்களின் முக்கியமாக கருதப்படுபவர். அவர் இன்று பிள்ளையானுடன் இணைந்து அவரது சட்டத்தரணியாக செயற்பட வந்திருப்பது என்பது ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஆரம்ப புள்ளியாக கருதுகின்றோம். 

இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவானது இந்த நாட்டில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகம் எங்கள் மத்தியில் எழுகின்றதுடன் இனிவரும் காலங்களில் இவர்கள் தொடர்பான பல தகவல்கள் வெளியிடப்படும். இதேவேளை இவர்கள் இருவரது செயற்பாடுகளின் பின்னால் பெரிய ஒரு சதிதிட்டம் இருப்பதாக கருதுகின்றோம். அதேவேளை மக்கள் இவர்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். 

இன்று இடம்பெறும் கைதுகள் இவர்களால் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில ஊழல்கள் கொலை குற்றச்சாட்டுக்கள் போன்ற விடையங்கள் காரணமாக சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே எந்த ஒரு அரசியல் நோக்கத்துக்காவும் இவர்களை கைது செய்யப்படவில்லை இவர்கள் கடந்த காலங்களில் வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர் அதனை நிறைவேற்றவில்லை என பாராளுமன்றத்தில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இன்று அவர்களது குற்றச்சாட்டுக்கள் ஊழல்கள் வெளிவந்த பின்னர் மீண்டும் அழுகுரலை காணக் கூடியதாக இருக்கின்றதுடன் அரசாங்கம் எங்களை அரசியல் பழிவாங்கல் செய்வதாக அலறிக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு சட்டரீதியான நடவடிக்கை இது தொடர்பான தகவல்கள் வெளிவரும் என்றார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05