ஜோதிடம்
அட்சய திருதியை நாளில் என்ன செய்ய வேண்டும்?

Apr 28, 2025 - 10:04 AM -

0

அட்சய திருதியை நாளில் என்ன செய்ய வேண்டும்?

அட்சய திருதியை நன்னாளில் தங்கம் வாங்கலாமா, வெள்ளி வாங்கலாமா, எதுவும் இல்லாவிட்டால் ஒரு கிலோ கல் உப்பாவது வாங்கலாமா என பலர் யோசனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அட்சய திருதியை நன்னாள் ஒரு புண்ணிய தினம் என்கிறார்கள், அது குறித்து பார்க்கலாம். 

அட்சய திரிதியை என்பது ஒரு புண்ணிய தினம். அது எதிர்வரும் 30.04.2025 புதன்கிழமை அன்று வருகிறது. அட்சய நாளில் உள்ள சிறப்புகள், 

1. பரசுராமர் அவதரித்த திருநாள் 
2. கங்கை நதி இவ்வுலகிற்கு வந்த திருநாள் 
3. பக்தன் சுதாமர் துவாரகாவில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இல்லத்திற்கு சென்ற நாள். 
4. பாண்டவர்கள் சூரியதேவனிடம் இருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாள்.
5. வியாச தேவரால் மஹாபாரதம் இன்று தான் எழுதப்பட்டது. 
6. திரேதாயுகம் தொடங்கிய நாள் 
7. "கனகதாரா ஸ்தோத்ரம்" ஆதிசங்கராச்சாரியாரால் இன்று இயற்றப்பட்டது. 
8. குபேரருக்கு இன்று செல்வத்தின் பொறுப்பு வழங்கப்பட்டது.
9. அன்னபூரணிதேவி தோன்றிய நாளாகக் கருதப்படுகிறது.
10. இந்நன்னாளில் ரதயாத்திரைக்கான ரதம் செய்யும் பணி தொடங்கும். 
11. கீர்ஷோர் கோபிநாத் (ரெமுன, ஒரிஸா), மதன மோகன், கோவிந்தா மற்றும் கோபிநாத் விக்ரகங்களுக்கு சந்தன் யாத்திரை தொடங்கும் நாள்.
12. பார்லி தோன்றிய நாள் (யாகத்திற்கு உபயோகப்படுத்தும் பொருள்) 
13. பத்திரிநாத்திலுள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோயில் குளிர் காலங்களில் நடையடைத்து அட்சய திரிதியை சுபதினத்தில் மீண்டும் பக்தர்கள் தரிசிப்பதற்காக கோவில் நடை திறக்கபடும். 

அட்சய திருதியை என்பது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு 3ஆவது நாளில் வரும் திருதியை திதியில் கொண்டாடப்படுவதாகும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்த நாளில் தானம் செய்வது, தங்கம் வாங்குவது, வீட்டு கிரகபிரவேசம் செய்வது என்பது பலனை தரும். இந்த நன்னாளில் சுபகாரியங்களையும் செய்யலாம். அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை 5.31 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 30 ஆம் திகதி பிற்பகல் 2.12 மணிக்கு முடிகிறது. 

எனவே, வழிபாடு செய்ய உகந்த நேரம் ஏப்ரல் 30 ஆம் திகதி காலை 5.41 மணி முதல் 12.18 மணி வரை ஆகும். இந்த நாளில் லட்சுமி தேவியையும் விஷ்ணு பகவானையும் வழிபட்டால் மகிழ்ச்சி பெருகும். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக இருக்கும். அது போல் வெள்ளி கூட வாங்கலாம்.

Comments
0

MOST READ
01
02
03
04
05