May 7, 2025 - 02:03 PM




மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி பல்வேறு உள்ளுராட்சிமன்றங்களையும் வெற்றிகொண்டதையடுத்து நேற்று (06) இரவு பல்வேறு பட்டாசு கொழுத்தி கொண்டாடியதுடன் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ஊர்வலமாகவும் கொண்டுசென்றனர்.
நேற்று நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபை உட்பட பல்வேறு உள்ளுராட்சிமன்றங்களிலும் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றிவாகை சூடியுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் 20 வட்டாரங்களில் 16 வட்டாரங்களை இலங்கை தமிழரசுக்கட்சி கைப்பற்றிய நிலையில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலான மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாநகரசபையின் பல்வேறு வட்டாரங்களிலும் நேற்று மாலை வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன் வேட்பாளர்களை மக்கள் கொண்டாடிய நிகழ்வும் நடைபெற்றது.
இதேபோன்று ஏறாவூர்ப்பற்று பிரதேசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி வெற்றிபெற்றதையடுத்து அங்கு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரும் ஊடகவியலாளருமான செ.நிலாந்தனின் ஆதரவாளர்களினால் தமிழரசுக்கட்சி சின்னம் கொண்ட கேக்வெட்டப்பட்டு வெற்றிக்கொண்டாட்டம் நடாத்தப்பட்டது.























