May 14, 2025 - 05:31 PM -
0
அமெரிக்காவின் சான் டியாகோவில் உள்ள லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்த 36 வயது ஜாக்குலின் மா, சான் டியாகோ கவுண்டியின் '2022 ஆம் ஆண்டின் நல்லாசிரியர்' என்ற விருது பெற்று புகழப்பட்டவர்.
ஆனால், அவரது மாசற்ற பிம்பத்தை உடைத்து, மாணவர்களுடனான அநாகரிக உறவு குற்றச்சாட்டுகள் அவரை சர்ச்சையின் உச்சத்திற்கு கொண்டு சென்றன. இந்த விவகாரம் அமெரிக்க கல்வித்துறையையும், சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜாக்குலின் மா, தனது பள்ளியில் பயிலும் 12 வயது மாணவனுடன் சுமார் 10 மாதங்களாக முறைகேடான உறவு வைத்திருந்தார். காதல் கடிதங்கள், தொலைபேசி அரட்டைகள், மற்றும் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட செய்தி பரிமாற்றங்கள் மூலம் அவர் மாணவனை தன்வசப்படுத்தினார்.
மகனின் நடவடிக்கைகளை கண்டு சந்தேகமடைந்த மாணவனின் தாய், ஆசிரியை - மகன் இடையே நடந்த அந்தரங்க உரையாடல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதாரமாக கொடுத்து 2023 மார்ச்சில் பொலிஸில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸார் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன. ஜாக்குலின் ஒரு மாணவனுடன் மட்டுமல்ல, 11 வயது மற்றொரு மாணவனுடனும் 2020 இல் இதேபோன்ற உறவு வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஜாக்குலின் மாணவர்களை கவர பரிசுகள், உணவு, மற்றும் சிறப்பு கவனம் அளித்து, அவர்களின் வீட்டுப்பாடங்களை செய்து கொடுத்து, தொடக்கூடாத இடங்களில் தொட்டு அவர்களை தனது வலையில் வீழ்த்தியது உறுதியானது.
தனது வலையில் சிக்கிய மாணவர்களை கொண்டு அவர்களது நண்பர்களையும் தன்வசப்படுத்தியுள்ளார்.மேலும், பாடசாலை வழங்கிய டேப்லெட்கள் மற்றும் வீடியோ கேம் அரட்டை அறைகள் மூலம் மாணவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.
இந்த குற்றங்கள் 'வெளிப்படையாகவே நடந்தன, இதனால், அவரது விருது பெற்ற ஆசிரியை பிம்பம் அவற்றை மறைத்தது' என நீதிபதி என்ரிக் கேமரேனா கூறினார்.
2025 பிப்ரவரியில், ஜாக்குலின் மா, இரண்டு மாணவர்களுடனான பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் மற்றும் ஆபாச உள்ளடக்கம் வைத்திருந்த குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து, 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.