May 15, 2025 - 12:16 PM -
0
கணவரின் திருமணத்திற்கு மாறான உறவு மனைவியின் தற்கொலைக்கு காரணமாக கூறமுடியாது என்று இந்தியாவில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கணவரின் திருமணத்தை மீறிய உறவு மனைவியின் தற்கொலை முடிவுக்கு காரணமாக கூறமுடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கணவர் ஒருவர் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால், மனைவி மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கணவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு எதிராக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதியரசர் சஞ்சீவ் நருலா,
'கணவர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக ஆதாரங்கள் இருந்தாலும், மனைவியை கொடுமைப்படுத்திய பிரிவிலோ (ஐபிசி 498 ஏ) அல்லது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவிலோ (ஐபிசி 306) தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் அவரை தண்டிக்க முடியாது. வரதட்சணை கொடுமை பிரிவிலும் (ஐபிசி 304 பி) ஆதாரங்கள் இல்லாமல் தண்டிக்க முடியாது' என தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் காவல்துறை விசாரணை முடிந்துவிட்டதாலும், நீதிமன்ற விசாரணை எப்போது முடியும் என்று தெரியாததாலும், அவர் சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு இல்லாததாலும், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
அந்தப் பெண்ணின் கணவர், தன் மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும், அவர் வாங்கிய பொருட்களுக்கு இஎம்ஐ கட்டச்சொல்லி கொடுமைப்படுத்தியதாக பெண் வீட்டுத்தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
அதற்கு, 'அந்தப் பெண் உயிருடன் இருக்கும்போது அவரோ அல்லது அவர் குடும்பத்தினரோ இதுபோன்ற எந்த புகாரையும் பொலிஸாரிடம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, வரதட்சணை கொடுமை பற்றி நம்பகத்தன்மை குறைந்து காணப்படுகிறது' என நீதிமன்றம் கூறியுள்ளது.