May 16, 2025 - 12:47 PM -
0
சோளிங்கர் அருகே மாமியார் உட்பட 3 பேரைக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொடைக்கல் புதுகுடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (30). இவரது மனைவி புவனேஷ்வரி (26). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், பாலுவின் சித்தப்பா மகனான விஜய் (26) என்பவருக்கும், புவனேஸ்வரிக்கும் தவறான நட்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பாலு இருவரையும் கண்டித்துள்ளார்.
இந்த தகராறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரைப் பிரிந்த புவனேஷ்வரி, வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், புவனேஸ்வரி 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பாலு ஆத்திரமடைந்து, நேற்று முன்தினம் இரவு புவனேஷ்வரியை சந்தித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த மாமியார் பாரதியை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து பாலு தப்பிச்சென்றார்.
பின்னர், கொடைக்கல் பகுதியில் உள்ள தம்பி விஜய் வீட்டுக்குச் சென்றார். அங்கு விஜய் இல்லாததால் அவரது தந்தை அண்ணாமலை (52), தாய் ராஜேஸ்வரி (45) ஆகியோரைக் கொலை செய்துவிட்டு, வாலாஜா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் வாலாஜா பொலிஸார் கீழ்புதுப்பேட்டை பகுதிக்கு சென்று பாரதி உடலையும், கொண்டப்பாளையம் பொலிஸார் அண்ணாமலை மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வாலாஜா மற்றும் கொண்டப்பாளையம் பொலிஸார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பின்னர், வாலாஜா பொலிஸார் பாலுவைக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.