பல்சுவை
வௌியான முக்கிய அறிவிப்பு

May 19, 2025 - 06:34 PM -

0

வௌியான முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்க, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 7 வங்கிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டன.

 

ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தமிழ்நாடு வளர்ச்சியில் தன்னிகரற்று முன்னேறும் நிலையில், வளர்ந்த நாடுகளில் தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டினைக் கட்டாயமாக வைத்திருப்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

 

தனிநபர் ஒருவர் ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு பெறுவதற்கு அதிக செலவு செய்திட வேண்டியுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டை கட்டணமின்றிப் பெற்றிட தமிழ்நாடு அரசு முன்னோடி வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், பல சலுகைகளை தர வங்கிகள் முன்வந்துள்ளன.

 

அதேபோல், சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர், அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தரமாக உடல் உறுப்புகளை இழந்தாலோ ரூ. 1 கோடி விபத்து காப்பீடு, இறந்த அரசு ஊழியர் வீட்டில் இருக்கும் இரு மகள்களுக்கு தலா ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 10 லட்சம் திருமண நிதி, உயர்கல்வி பயின்றிடும் மகனுக்கு ரூ. 10 லட்சம் வரை நிதி உதவி, அரசு ஊழியர் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டு தொகையாக 10 இலட்சம் ரூபாயும் வங்கிகள் வழங்கிடும் எனத் தெரிவித்தார்.

 

மேற்குறிப்பிட்ட இச்சலுகைகளை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகள் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியக் கணக்கினைப் பராமரித்து வரும் பட்சத்தில் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கிட முன்வந்துள்ளன.

 

இச்சலுகைகள் மட்டுமின்றி தனிநபர் வங்கிக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும்போது உரிய வட்டி சலுகைகள் வழங்கிடவும் முன்வந்துள்ளன. இந்த சலுகைகளை வங்கிகள் அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Comments
0

MOST READ
01
02
03
04
05