May 21, 2025 - 10:58 AM -
0
இந்தியாவின் சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில்,
தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600 இற்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக 2 மின்சார ரயில்களும் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒரே தண்டவாளத்தில் ஒரே நேரத்தில 2 ரயில்கள் வந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
15 நிமிட இடைவெளியில் வர வேண்டிய மின்சார ரயில் முன்கூட்டியே வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பயணிகள் தெரிவிக்கையில், இது ஒரு முறை அல்ல, நிர்வாக குளறுபடியால் நாள்தோறும் நடக்கும் அவலம் என புகார் தெரிவித்தனர்.