May 21, 2025 - 05:30 PM -
0
இந்தியாவில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதேசமயம், அங்கு பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டுகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் கோடை வெப்பம் மற்றும் மின்வெட்டு ஆகிய இரண்டுடனும் போராடி வருகின்றனர். தொடர் மின்வெட்டு காரணமாகவும், மின் துறை ஊழியர்கள் முறையான பதில் கொடுப்பதில்லை எனவும், இதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அங்கு மக்கள் சாலையில் இறங்கி போராடும் நிகழ்வும் நடந்துவருகிறது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியில் நடந்த ஒரு சம்பவம், அங்கு மின்வெட்டால் மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. ஜான்சி பகுதியில் வசித்துவரும் ஜெயந்தி குஷ்வாஹா என்ற பெண் தனது 10, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுவர்களுடன் ஒரு ஏடிஎம் மையத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ளார்.
இவர்களுடன் மற்றொரு பெண்ணும் அந்த ஏடிஎம் மையத்தில் ஓய்வெடுக்கும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
அவர் ஏன் தனது குழந்தைகளுடன் ஏடிஎம் மையத்தில் தஞ்சம் அடைந்தார் என்பது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
'நாங்கள் எங்கே செல்வது? குறைந்தபட்சம் இங்கே மின்சாரம் இருப்பதால் நாங்கள் இங்கே இருக்கிறோம். இரவு, பகல் என எப்போதும் எங்களுக்கு மின்சாரம் இல்லை. எனவே, நான், என் முழு குடும்பத்துடன், வெப்பத்திலிருந்து சிறிது ஓய்வு பெற இங்கே ஓய்வெடுக்கிறேன்.
மின்சாரத் துறையினரும் எங்களுக்கு எந்த முறையான தகவலையும் கொடுப்பதில்லை. என்னால் என் குழந்தைகளை வீதிகளில் உறங்க வைக்க முடியாது. எனவே நாங்கள் இங்கே ஏடிஎம்மில் இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.
மின்வெட்டால் அவதியுற்று குழந்தைகளுக்காக ஏடிஎம் மையத்தில் பெண் தங்கியிருப்பது, சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது. பலரும், உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (UPPCL) ஐ 'ஊழல் மற்றும் திறமையற்றது' என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.
வைரலாகிவரும் இந்த வீடியோவுக்கு கீழ் ஒருவர், 'இது உண்மையா என்று தெரியவில்லை (உண்மையாகத் தெரிகிறது), ஆனால் ஜான்சியில் மின்சார விநியோக நிலைமை மிகவும் மோசமாக உள்ளது,' என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.