May 26, 2025 - 02:46 PM -
0
தூத்துக்குடி கடற்கரைக்கு அருகில் மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவில் அமைந்துள்ள காரை சல்லி தீவு பகுதியில் மறு சீரமைப்பு பணிகளை ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து தமிழக வனத்துறை தொடங்கியுள்ளது. கடல் அரிப்பை தடுக்கும் விதமாக காரை சல்லி தீவைச் சுற்றி சுமார் 3 ஏக்கா் பரப்பளவில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
ராமேஸ்வரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து தூத்துக்குடி வரையில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் புகழ்பெற்ற மன்னார் வளைகுடா பகுதி அமைந்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் யுனஸ்கோ அறிவித்த முதல் கடல்சார் உயிர் கோள காப்பகமாக இது அமைந்து உள்ளது.
இந்த மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் முயல் தீவு, முள்ளித்தீவு, காரை சல்லி தீவு வான் தீவு என 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்த தீவுகளை சுற்றிலும் பவள பாறைகள், கடல் பாசிகள், கடல் குதிரை, கடல் அட்டை என பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள அரிய வகை கடற்புற்கள்தான், கடல் பசு, டால்பின், ஆமை, கடல் குதிரை உள்ளிட்டவைகளின் பிரதான உணவுகளாக இருக்கின்றன.
மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள காரை சல்லி தீவு 1969 ஆம் ஆண்டு 20.85 ஹெக்டேராக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் 2018- ஆம் ஆண்டு இதன் பரப்பளவு 5.97 ஹெக்டேராக சுருங்கியது. இதே நிலை நீடித்தால் இந்த தீவு 2036 ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்த தீவை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி கடற்கரைக்கு அருகில் மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவில் அமைந்துள்ள காரை சல்லி தீவின் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் மற்றும் SDMR யுடன் இணைந்து இதற்கான முன்னெடுப்பை தமிழக வனத்துறை தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரத்தின் கடலோர திறனை மேம்படுத்தவும் இயற்கை பேரழிவுகளிலிருந்து உள்ளூர் சமூகங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ஐஐடி மற்றும் எஸ்டிஎம்ஆர்ஐ வழங்கும் டெக்னிக்கல் உதவியுடன் கடலோர அரிப்பை தடுக்கவும், கடல் பல்லுயிரியலை மீட்டெடுக்கவும் உதவும், குறிப்பாக அழிந்து வரும் துகோங் உயிரினத்தை பாதுகாக்க உதவும்" என்று கூறியுள்ளார்.