May 26, 2025 - 04:33 PM -
0
திருகோணமலை, கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு, ஓட்டுமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி - பதுரியா நகர், ஆலையடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் ஓட்டமாவடி, சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஓட்டுமாவடியைச் சோந்த 6 நண்பர்கள் 3 மோட்டார் சைக்கிளில் சம்பவதினமான நேற்று இரவு கிண்ணியாவில் இருந்து ஓட்டமாவடி பகுதியை நோக்கி பயணித்த போது வாகரை பனிச்சங்கேணி பாலத்தில் வேககட்டுப்பாட்டை மீறி பாலத்துடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அங்கிருந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--