Jun 4, 2025 - 01:07 PM -
0
அமெரிக்காவுக்கு ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை அமெரிக்க எப்.பி.ஐ இயக்குனர் காஷ் பட்டேல் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் சீனாவை சேர்ந்த யுன்கிங் ஜியான் என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவரது காதலரும் சீனாவில் ஆராய்ச்சியாளருமான ஜூன்யோங் லியு, தனது காதலியை பார்க்க அமெரிக்காவுக்கு வந்து உள்ளார்.
அப்போது அவர் புசேரியம் கிராமினேரம் என்ற உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளார். இந்த நோய்க்கிருமியை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஆய்வு செய்து மேலும் மேம்படுத்த திட்டமிட்டு இருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நோய்க்கிருமி விவசாய பயங்கரவாத ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புசேரியம் கிராமினேரமின் நச்சுகள் மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.
இதுகுறித்து எப்.பி.ஐ. இயக்குனர் காஷ் பட்டேல் தெரிவிக்கையில்,
யுன்கிங் ஜியான் என்பவர் தான் பணிபுரியும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக புசாரியம் கிராமிநேரம் என்ற ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்தி உள்ளார். இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கோடிக் கணக்கான டாலர்கள் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திவிடும். ஜியானின் காதலன் சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். அங்கு அவர் இந்த நோய்க்கிருமி குறித்து ஆராய்ச்சி நடத்துகிறார்.
முதலில் குற்றச்சாட்டை மறுத்த அவர் பின்னர் அமெரிக்காவுக்கு நோய்க் கிருமியை கடத்தியதை ஒப்புக்கொண்டார். யுன்கிங் ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்துள்ளார். அவர் இந்த நோய்க்கிருமி குறித்த ஆராய்ச்சிக்காக சீன அரசாங்கத்திடமிருந்து நிதி பெற்ற ஆதாரங்கள் உள்ளன என்றார்.
சீன ஆராய்ச்சியாளர்கள் மீது சதித்திட்டம், அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்துதல், தவறான கருத்துக்களை வெளியிட்டது மற்றும் விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.