Jun 5, 2025 - 07:12 PM -
0
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சிறுமியை பெற்ற தாயே கூட்டுபாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொடுமை அரங்கேறியிருக்கிறது. தந்தையின் தலையீட்டால் தப்பிய சிறுமி அளித்த புகாரின்பேரில், தாயும் காதலனும் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த அந்த பெண், பாஜக மகிளா மோர்ச்சாவின் முன்னாள் அலுவலகப் பொறுப்பாளராக இருந்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவர் மகளை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். பெண்ணின் கணவர் மகனுடன் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு சுமித் பட்வால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஹரித்வாரில் ஒரு ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளனர். இந்த சூழலில் தான் பெண்ணின் 13 வயது மகள் தனது தாய் மற்றும் அவரது காதலர் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். தனது தந்தையை சந்தித்த அந்த சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து கூறி அழுதிருக்கிறார்.
தாயின் காதலர் உட்பட பலர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறவே அதிர்ந்துபோன தந்தை அதுகுறித்து ராணிப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிஸார் உண்மைத் தன்மையை அறிய சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் தாயும், அவரது காதலர் சுமித் பட்வாலும் சிவமூர்த்தி சவுக் அருகே கைது செய்யப்பட்டனர். குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சுபம் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது மகளிடம் பாலியல் துஷ்பிரயோகத்தை இயல்பாக்க முயன்றதாகவும், பாலியல் வன்கொடுமைகள் இயல்பானது என்று கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சிறுமி 8 முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையில் அவருக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்துள்ளனர். இந்த கொடூரமாக சம்பவம் அரங்கேறியபோது சிறுமியின் தாய் அருகிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் நடத்தி வந்த ஹோட்டலில் தான் இந்த கொடுமைகள் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த பொலிஸார் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
இதனிடையே பாஜக மகிளா மோர்ச்சா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த பெண் கடந்த 2024 ஆம் ஆண்டே கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. சிறுமியை பெற்ற தாயே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் உத்தரகண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.