Jun 6, 2025 - 06:00 PM -
0
பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் மூதாட்டி பாபா வங்கா. இவருக்கு 12 வயது இருக்கும்போது பல்கேரியாவில் பெரும் புயல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்குப் பார்வை பறிபோனது.
அப்போதிலிருந்து, பாபா வங்காவிற்கு எதிர்காலத்தில் நடக்கக்கூடிய காட்சிகள் மனதில் வருவதாக அவர் கூறியிருக்கிறார். மேலும், எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.
இதனை, கடவுள் தனக்கு கொடுத்த சக்தியாக கருதியிருக்கிறார். பாபா வங்கா, கடந்த 1996 ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். ஆனாலும் இவர் உலகைப் பற்றி கணித்து எழுதி வைத்திருந்ததெல்லாம் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி கணித்து எழுதி வைத்திருக்கும் இவர், வருகிற 5079ம் ஆண்டு உலகம் அழியும் எனவும், அதுவரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். இவர், இதுவரை நடந்த உலகின் பல முக்கிய நிகழ்வுகளை மிகத் துல்லியமாக கணித்ததாகச் சொல்லப்படுகிறது.
இதில் கடந்த 2001 ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்திருக்கிறார். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விடயங்களை இவர் துல்லியமாக கணித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வாறு ஏராளமான சம்பவங்களை கணித்திருக்கும் பாபா வங்கா, 2025லும் அவர் கணித்திருந்த மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ல் நடந்த 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியான சம்பவம் நடந்தேறியது.
மேலும், பொருளாதார வீழ்ச்சி, மூன்றாம் உலகப்போர் என என இந்த ஆண்டில் அடுத்தடுத்த சம்பங்கள் அரங்கேறும் என்று கணித்துள்ள பாபா வங்கா, ஜூன் 7ஆம் திகதி (நாளை)க்கு பின்னர் உலகளாவிய அழிவுகள் ஏற்படும் என்று கணித்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜப்பானின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டட்சுகி என்ற பெண்ணின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மங்கு கலை ஓவியரான ரியோ டட்சுகி தனது கனவுகளில் காணும் சம்பவங்களை வரைய தொடங்கினார். அவர் 1980 முதல் தெளிவான கனவுகளை வரைய தொடங்கிய நிலையில் இது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்ததாக கூறப்படுகிறது.
1991-ம் ஆண்டு பிரெட்டி மெர்குரியின் மரணம், 1995-ம் ஆண்டு கோபே நிலநடுக்கம், 2011-ம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி, 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் குறித்த இவரது கணிப்புகளை அவர் முன்கூட்டியே துல்லியமாக வரைந்திருந்ததாக கூறுகிறார்கள்.
அதன்பிறகே அவர் முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக அங்கீகரிக்கப்பட்டதோடு அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் வரைந்த மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இந்த ஆண்டு (2025)-ம் ஜூலை மாதத்தில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலுக்குள் ஏற்படும் பெரும் பிளவு காரணமாக மிக பயங்கரமான சுனாமி ஏற்படும் என ரியோ டட்சுகி கணித்துள்ளார்.
இந்த சுனாமி 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட 3 மடங்கு பெரிதாக இருக்கும் எனவும் ஜப்பான் தெற்கு பகுதியில் கடல் கொந்தளிப்பது போல இருக்கும் என்பதோடு அப்பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என கணித்துள்ளார். இதனால் மீண்டும் சுனாமி ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் ரியோ டட்சுகியின் கணிப்பு தொடர்பாக ஜப்பான் அரசு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரம் ஜப்பானில் உள்ள சீன தூதரகம் இயற்கை பேரழிவு குறித்து தங்கள் நாட்டு மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுத்தியுள்ளது.
ரியோ டட்சுகியின் இந்த கணிப்பு காரணமாக ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல இருந்த பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால் ஜப்பானுக்கான விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ரியோ டட்சுகியின் கணிப்பு காரணமாக தங்கள் பயணங்களை ரத்து செய்துள்ளனர்.