பல்சுவை
சொல்ல முடியாத கொடூரம்

Jul 1, 2025 - 04:16 PM -

0

சொல்ல முடியாத கொடூரம்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி செவூரைச் சேர்ந்த ரிதன்யா என்ற மணப்பெண், திருமணமாகி 78 நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த வழக்கில் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

ரிதன்யா, திருமணமாகி 78 நாட்களுக்குள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகியதாகவும், இதற்கு கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரே காரணம் எனவும் தனது இறுதி ஆடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

வரதட்சணை கொடுமை, இரவு முழுவதும் உடலுறவு தொல்லை, உள்ளிட்ட காரணங்களால் அவர் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ, வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ளது.

 

ரிதன்யாவின் தந்தை, மகள் மணமகன் வீட்டில் துன்புறுத்தப்படுவதாக முன்பே தெரிவித்திருந்தாலும், "பேசி தீர்த்துக்கொள்ளலாம்" என அறிவுறுத்தியதாகவும், இது போதுமான அளவு உறுதியாக இல்லை எனவும் தமிழ்வேந்தன் சுட்டிக்காட்டினார்.

 

தமிழ்வேந்தன், இந்த வழக்கு 100% குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியாகும் என திட்டவட்டமாக கூறினார்.

 

வரதட்சணை கொடுமை (IPC 304B), பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் (IPC 498A), மற்றும் உள்நாட்டு வன்முறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குறைந்தபட்சம் 10 - 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் எனவும், மொத்தமாக 30 ஆண்டுகள் வரை தண்டனை பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ரிதன்யாவின் தற்கொலை முடிவு குறித்து வருத்தம் தெரிவித்த தமிழ்வேந்தன்,

 

'அவர் காரை ஓட்டி வீட்டிற்கு வந்து, நடந்தவற்றை கூறி, பொலிஸாருக்கு புகார் அளித்திருந்தால், இந்த முடிவு தவிர்க்கப்பட்டிருக்கலாம்' என குறிப்பிட்டார்.

 

மேலும், பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக போராட வேண்டும், தற்கொலை ஒரு தீர்வாகாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

தமிழ்வேந்தன், சமூகத்தில் 'குடும்பம் என்றால் அப்படித்தான் இருக்கும், பொறுத்துக்கொள்' என்ற மனநிலையை கடுமையாக விமர்சித்தார்.

 

பெற்றோர்கள் மகள்களுக்கு மன உறுதியையும், ஆதரவையும் அளிக்க வேண்டுமெனவும், 'மானம், கவுரவம்' என்ற பெயரில் பெண்களை அட்ஜஸ்ட் செய்யச் சொல்வது ஏற்கத்தக்கதல்ல எனவும் கூறினார்.

 

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை உடனடியாக காவல்துறையில் புகார் செய்ய வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.

 

2025 ஆம் ஆண்டிலும் வரதட்சணை கொடுமைகள் தொடர்வது அதிர்ச்சி அளிப்பதாக தமிழ்வேந்தன் குறிப்பிட்டார்.

 

'கணவனாக இருப்பவன் அன்புடன் இருக்க வேண்டும், துன்புறுத்துபவன் ஆணாகவே கருதப்பட முடியாது' எனவும், ரிதன்யாவின் ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் மற்றும் உடல் துன்புறுத்தல்கள் குற்றவாளிகளுக்கு எதிராக வலுவான ஆதாரமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05