கிழக்கு
அட்டாளைச்சேனை பிரதேச சபை SLMC வசம்

Jul 2, 2025 - 06:11 PM -

0

அட்டாளைச்சேனை பிரதேச சபை SLMC வசம்


அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் எ.எஸ்.எம். உவைஸ் உட்பட  உப தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முகம்மட் பாரூக் றஜீத்தும் தெரிவாகினர்.

 

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமாகிய ஆதம்லெப்பை முகம்மது அஸ்மி தலைமையில் சபை மண்டபத்தில் இன்று (02) மாலை நடைபெற்றது.

 

புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 18 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர். அம்பாறை மாவட்டம்  அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 04 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி சார்பில் 08 உறுப்பினர்களும், தேசிய மக்கள் கட்சி சார்பில் 03 உறுப்பினர்களும், தேசிய காங்கிரஸ் 02 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 01 உறுப்பினரும் என 18 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதன்போது உள்ளூராட்சி ஆணையாளர் புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.

 

இந்நிலையில் ஸ்ரீலங்கா மஸ்லீம் காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த ஒருவரும், தேசிய மக்கள் சக்தி கட்சியை செர்ந்த ஒருவரும் புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர். இதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது. இதன் போது சிறு இழுபறிக்கு பின்னர் பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க  வாக்கெடுப்பினை கோரினர். அத்துடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை சேரந்த 4 பேர் குறித்த வாக்கெடுப்பினை பகிஸ்கரித்தனர். 

 

இதே வேளை ஏற்கனவே உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட இரண்டு புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.

 

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்  கட்சி சார்பில்  போட்டியிட்ட அப்துல் சமட் முகம்மது உவைஸ் என்பவர் 11 ஆசனங்களை பெற்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார்.

 

எதிராக போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான சாஹீர் பாஹீமா என்பவர் 03 ஆசனங்களை பெற்ற நிலையில் 08 மேலதிக வாக்குகளால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் அப்துல் சமட் முகம்மது உவைஸ்   புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

 

மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றது. உப தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முகம்மட் பாரூக் றஜீத் தெரிவு செய்யப்பட்டார். ஏனைய தரப்பில் இருந்து போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக உப தவிசாளராக  முகம்மட் பாரூக் றஜீத் தெரிவானார்.

 

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான உதுமாலெப்பை, ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05