Jul 2, 2025 - 06:41 PM -
0
பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக இன்று (02) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது எனவே அதன் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று(02) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்தி குழு தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்றது.
இதில் போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் பிமல் ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால், பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபு, ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, வைத்தியர் இ.சிறிநாத், இரா.சாணக்கியன் மற்றும் அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளீதரன், மற்றம் திணைக்கள அதிகாரிகள் பிரதேசசபை தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது அபிவிருத்திகுழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் க. பிரபு.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்பிமல் ரத்நாயக்கவின் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் உள்ள அபிவிருத்தி தொடர்பாகவும் பல திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் எந்தவோரு செயற்பாடுகளை செயல்படுத்த முடியாது என கூக்குரல் இட்டு திரிந்த எதிர்கட்சியினர் இன்று அடங்கி போய் இருக்கின்றனர்.
இன்று சிறுபோக வேளாண்மை அறுவடை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் நெல்லுக்கான நிர்ணய விலையை நிர்மானிப்பதற்கு கூட முடியாத கடந்த கால அரசாங்கம் இருந்தது.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்ற பின்னர் நெல்லுக்கான நிர்ணய விலையை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் அதனை கொள்வனவு செய்வதற்காக 6 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளோம்.
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக நீதி அமைச்சர் பல விடயங்கள் தொடர்பாக கலந்து ஆலோசித்து வருகின்றதுடன் அதனை திருத்துவது தொடர்பாக சட்டத்தரணிகள், சமூக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்களுடன் கடந்த வாரம் கலந்து உரையாடியுள்ளார் அதனை மறுசீரமைக்க கலந்து ஆலோசித்துள்ளோம்.
பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக இன்று விசாரணைகள் மோற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது அதற்கான விசாரணையில் எந்த முடிவு வருகின்றதே அதனடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் அது சட்டரீதியாக இடம்பெறும்.
தேசிய மக்கள் கத்தி மக்களின் நலன்சார்ந்த பணியை முன்னெடுத்துவரும் அரசாங்கம் மக்களின் ஆதரவுடன் நீடித்து பயணிக்கும் என எதிர்கட்சியினருக்கு நாங்கள் சவால் விடுகின்றோம் என தெரிவித்தார்.
--