Jul 10, 2025 - 12:19 PM -
0
அம்பாறையில் இம்முறை மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோகத்திற்கான நெல் அறுவடை மிக துரிதமாக நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் சுமார் 55,285 ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் மூலம் சுமார் 265,736 மெட்ரிக் டன் நெல் அறுவடையாக எதிர்பார்க்கப்படுவதுடன் இது தேசிய நெல் உற்பத்தியில் இம்மாவட்டம் 12.7 வீத பங்களிப்பை செய்து வருவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நெல் உற்பத்தி செய்யும் முதல் மூன்று மாவட்டங்களிலும் அம்பாறை மாவட்டமும் முதன்மை வகிக்கின்ற நிலையில், இம்முறை மேற்கொள்ளப்பட்ட நெல் உற்பத்தியில் கணிசமானவை 'சிவப்பு நாடு' இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.
நாவிதன்வெளி, அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, போன்ற பிரதேசங்களில் தற்போது அறுவடை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் உலர வைக்காத நெல் ஒரு கிலோ 100 ரூபா முதல் 105 ரூபா வரை தனியார் நெல் வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
--