Sep 1, 2025 - 11:35 AM -
0
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹேஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 01.05 கிலோ கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் 100,000 ரூபாய் பணம் ஆகியவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை நடத்துவதாகக் கூறி ஒருவர் ஹேஷ் போதைப்பொருட்களை கடத்துவதாகக் கல்கிஸ்ஸை குற்ற விசாரணைப் பணியகத்தின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பகுதியில் மாதந்தோறும் 30,000 ரூபாய் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வீட்டில் இருந்து இந்தக் கடத்தல் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்த வீட்டைச் சோதனையிட்டபோது, மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்ட அதேநேரம், அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

