Sep 1, 2025 - 12:49 PM -
0
மீதொட்டமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்து முச்சக்கர வண்டி மற்றும் 26,000 ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, பிரபல போதைப்பொருள் வர்த்தகர் எனக் கூறப்படும் ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணை இன்று (01) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இதன்போது, அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்ஷன டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் முறைப்பாட்டு தரப்பின் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
அதன் பின்னர் மேலதிக சாட்சிய விசாரணைக்காக ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் ஹரக் கட்டா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அதேநேரம், கடுமையான பரிசோதனைக்குப் பிறகே மக்கள் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

