Sep 28, 2025 - 07:59 AM -
0
ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபையினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் இன்று (28) மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் நோக்கில், 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தம் செய்தன.
பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இந்தத் தடையை நீக்குவது தொடர்பாக பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், இதில் முடிவு ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள், ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிப்பதற்கான 'ஸ்னாப்பேக்' திட்ட செயல்முறைகளை ஆரம்பித்தன.
இந்த செயல்முறையின் படி, பொருளாதார தடைகள் 30 நாட்களுக்குள் மீண்டும் அமலுக்கு வரும்.
கடந்த ஜூன் மாதத்தில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் எடுத்த எதிர் நடவடிக்கைகள் உட்பட, அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேர்மையாக இருக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, ஐரோப்பிய நாடுகள் கடந்த மாதம் ஐ.நா. தடைகளை மீண்டும் அமல்படுத்த அனுமதிக்கும் பொறிமுறையை செயல்படுத்தின.
இந்த நிலையில் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதை ஆறு மாதங்கள் தாமதப்படுத்த கோரி நேற்று ரஷ்யா மற்றும் சீனா கொண்டு வந்த யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன. இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, வரைவுத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் ரஷ்யா மற்றும் சீனா முயற்சியை ஐ.நா. பாதுகாப்பு சபை நிராகரித்தது.
இதையடுத்து 'ஸ்னாப்பேக்' திட்ட செயல்முறையின்படி ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் இன்று முதல் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.
இதனால் ஈரானின் வெளிநாட்டு சொத்துகள் முடக்கப்படும் என்பதுடன் ஈரானால் எந்த நாட்டுடனும் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது.
அத்துடன் ஈரான் பலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை நடத்தினால் அதற்காக தண்டனை விதிக்கப்படும்.\\
இது, ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள ஈரானை மேலும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

