Sep 30, 2025 - 05:02 PM -
0
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட டெல்லி சாமியார், கைதில் இருந்து தப்பிப்பதற்காக 40 நாட்களில் 13 ஓட்டல்களில் மாறி மாறி தங்கியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
டெல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த கல்வி நிறுவனத்தின் இயக்குநர் சாமியார் சைத்தன்யாநந்தா சரஸ்வதி மீது புகார் அளிக்கப்பட்டது. அவரை டெல்லி பொலிஸார் கைது செய்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு அந்த சாமியார் திரும்பியதும், அப்போதே தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துக்கொண்டு, சுமார் 40 நாட்களுக்கு 13 ஓட்டல்களில் மாறி மாறி தங்கியிருந்தது தெரியவந்தது. குறிப்பாக சிசிடிவி கேமரா இல்லாத சிறிய ஓட்டல்களை தேர்வு செய்து அவர் தங்கியிருக்கிறார்.
இதற்கிடையில் இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மதுரா, பிரிந்தாவன் பகுதிகளில் உள்ள மடங்களிலும் அவர் தங்கியிருந்தது தெரியவந்திருக்கிறது. கைதில் இருந்த தப்பிக்க அவர் இருப்பிடத்தை மாற்றியபடி இருந்ததும், தொலைபேசி சிக்னலை வைத்து தன்னை டிராக் செய்யாமல் இருக்க தன்னிடம் இருந்த 3 தொலைபேசிகள், ஐபேட் ஆகியவற்றை அவர் பயன்படுத்தாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த சாமியார் தனது தொலைபேசி, ஐபேட்டின் பாஸ்வேர்ட்டை இதுவரை பொலிஸாரிடம் சொல்லவில்லை என்றும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.