Oct 12, 2025 - 09:11 AM -
0
வடக்கு எல்லையில் உள்ள பல மலைப்பகுதிகளில் பாகிஸ்தான் துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளமையை தலிபான் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வான்வெளியை மீறி வியாழக்கிழமை தனது எல்லைக்குள் ஒரு சந்தையில் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் கூறியதுடன் அதற்கு பதில் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.
எனினும் பதில் தாக்குதலாக கருதப்படும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.
பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக குற்றஞ்சாட்டி வருகிறது.
மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்தது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீது தலிபான்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானின் எல்லையோர மாகாணங்களான குனர், ஹெல்மண்ட், பக்டியா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாகிஸ்தான் இராணுவ நிலைகள், சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
மேலும், எல்லையில் உள்ள பாகிஸ்தான் சோதனைச்சாவடிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.