Oct 12, 2025 - 04:37 PM -
0
அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வான்வழித் தாக்குதல் நடந்தது. இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம்சாட்டிய தலிபான் பதிலடியாக பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.
நேற்று (11) இரவு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த இந்த தாக்குதலின்போது இரு தரப்புப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நிகழ்ந்தது.
இந்த தாக்குதலில் 15 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று (12) தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிவிப்பில், இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றுவிட்டதாகவும், 25 பாகிஸ்தான் இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தச் சண்டையின்போது கூடுதலாக 30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்தனர் என்று அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர் எதிர்த்தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறினால் வலுவான பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தானை எச்சரித்தார்.
குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்கள் உட்பட டூராண்ட் கோடு நெடுகிலும் பல இடங்களில் மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால், தலிபான் தங்கள் முகாம்களை கைப்பற்றியதாகக் கூறும் கூற்றுக்களை அவர்கள் நிராகரித்தனர்.
இந்த தாக்குதலில் பீரங்கிகள் மற்றும் வான்வழி ஆயுதங்களையும் பயன்படுத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், உயிரிழப்புகள் குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். தாலிபான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியா வருகை தந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.