Nov 13, 2025 - 06:20 PM -
0
இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பாகிஸ்தான் இராணுவமும், துணை இராணுவப் படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் அந்நாட்டின் கிரிக்கெட் சபை தலைவருமான மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
தொடரின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் இன்று (13) அறிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீரும் இலங்கையின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"எமது இராணுவமும் துணை இராணுவப் படையினரும் இலங்கைக் அணியின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்," என மொஹ்சின் நக்வி கூறினார்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னர், அந்நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றுக்கு முன்னால் இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
12 பேர் உயிரிழந்ததுடன் 27 பேர் காயமடைந்த இந்தத் தாக்குதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்லாமாபாத்தில் நடந்த மிக மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.
அந்தத் தாக்குதல் இடம்பெற்ற இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானத்திற்கும், இலங்கைக் அணி தங்கியுள்ள விடுதிக்கும் இடையிலான தூரம் 10 கிலோமீட்டருக்கும் குறைவானதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

