Nov 19, 2025 - 02:43 PM -
0
காலத்தால் அழியாத விழுமியங்களான கெளரவம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான மரைன் படைப் பிரிவின் அசைக்கமுடியாத உறுதிப்பாட்டின் 250 வருட கால பூர்த்தியினை கௌரவிக்கும் வகையில், நவம்பர் மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற வருடாந்த Marine Corps Ball வைபவத்தில், அமெரிக்க மரைன் படைப் பிரிவின் 250 ஆவது பிறந்த நாளினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையுடன் கொண்டாடியது. தூதுவர் ஜுலீ சங் ஏற்பாடு செய்த இவ்வைபவத்தில் முழு இலங்கையினையும் சேர்ந்த பங்காளர்கள் மற்றும் இராஜதந்திர அலுவலர்களுடன், பாதுகாப்பு பிரதியமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொந்தா மற்றும் ஏனைய இராணுவ பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
2026 ஆம் ஆண்டில் அமெரிக்காவானது தனது 250 வருட சுதந்திரத்தினைக் கொண்டாடுவதற்குத் தயாராகி வரும் வேளையில் இவ்வருட பிறந்த நாள் கொண்டாட்டம் வருவதானது, அமெரிக்கர்கள் போற்றுகின்ற சுதந்திரங்கள், பல தலைமுறைகளாக பாதுகாப்பின் முன் வரிசையில் விசுவாசத்துடன் நின்ற மரைன் படைப் பிரிவினரால் நிலைத்திருக்கின்றன என்பதை நினைவூட்டுகிறது.
இவ்வைபவத்தின் விருந்தினர் உரையினை நிகழ்த்திய மரைன் படைப் பிரிவின் மிகவும் சிரேஷ்ட ஆணை அதிகாரிகளுள் ஒருவரான Chief Warrant Officer Five (CWO5) டேமன் எச். ஹைன்ஸ் கலந்து கொண்டது இக்கொண்டாட்டத்தின் ஒரு விசேட அம்சமாக அமைந்தது. தற்போது கொழும்பில் மரைன் பாதுகாப்பு காவலராக கடமையாற்றும் தனது புதல்வரான Staff Sergeant கிறிஸ் ஹைன்ஸ் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் பங்குபற்றியமையானது ஒரு விசேட அர்த்தத்தினை கொண்டிருந்தது.
மரைன் படைப் பிரிவின் உயர்ந்த இலட்சியங்களை நிலைநாட்டிய மூன்று தலைமுறை மரைன் வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அது அமைந்திருந்தது. இவ்வைபவத்தின் பாரம்பரியம் மற்றும் மெய்யுணர்விற்கு ஏற்ப, தூதரகக் கடமையிலிருக்கும் இரு மரைன் வீரர்களை மீண்டும் படையில் இணைத்துக் கொள்ளும் நிகழ்விற்கு அவர் தலைமை தாங்கினார். அது மரைன் படைப்பிரிவின் அடிப்படை விழுமியங்கள் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீளவும் உறுதிப்படுத்திய ஒரு கெளரவமிக்க நிகழ்வாகும்.
மரைன் படைப்பிரிவின் சிறப்புமிக்க மரபினை கெளரவித்து அங்கு உரையாற்றிய தூதுவர் சங்,
“அமெரிக்க மரைன் படைப்பிரிவின் 250 ஆவது ஆண்டினை நாம் கொண்டாடுகையில், கெளரவம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு மரபினை நாம் கெளரவிக்கிறோம். திரிப்போலியின் கடற்கரையிலும், பசிபிக் பெருங்கடலுக்கு அப்பாலும், மற்றும் இன்று உலகம் முழுவதுமுள்ள தூதரகங்கள் அனைத்திலும் மரைன் வீரர்கள் எதிர்கொண்ட அனைத்து சவால்களையும் கடந்து செல்வதற்கு இந்த விழுமியங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
கொழும்பிலுள்ள எமது மரைன் பாதுகாப்பு வீரர்கள் தினமும் இந்த விழுமியங்களுடன் வாழ்கிறார்கள். மேலும் அமெரிக்கா தனது 250 ஆவது பிறந்தநாளை நெருங்கும் இவ்வேளையில், மரைன் வீரர்கள் எப்போதும் விசுவாசமாக இருப்பதன் காரணமாக நாம் போற்றும் சுதந்திரங்கள் நிலைத்திருக்கின்றன என்பது எமக்கு நினைவூட்டப்படுகிறது. செம்பர் ஃபிடெலிஸ் எப்போதும் விசுவாசமானவர்” எனக் குறிப்பிட்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அமெரிக்க மரைன் படைப்பிரிவு நிறுவப்பட்ட 250ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஜனாதிபதி ட்ரம்ப் அவர்கள் வெளியிட்ட, பலதலைமுறைகளாக மரைன் படை வீரர்கள் வழங்கும் அசாதாரண பங்களிப்புகளை நினைவுகூரும் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ள மரபுகளை தூதரகமும் பிரதிபலிக்கிறது.
“இரண்டாவது கண்ட மாநாடானது 1775, நவம்பர் 10ஆம் திகதிய தனது தீர்மானத்தின் மூலம்கண்ட மரைன்படையினை நிறுவியபோது, புரட்சியின் தீச்சுவாலைகளில் மரைன் படைப்பிரிவு பிறந்தது.
1776 ஆம் ஆண்டு நஸாவ் நகரில் நடந்த முதலாவது போர் நடவடிக்கை தொடக்கம், போரில் இரக்கமற்றவர்களாகவும், சுதந்திரம் மற்றும் நீதியின் அதிதீவிர பாதுகாவலர்களாகவும் மரைன் படையினர் நிரூபிக்கப்பட்டுள்ளனர்.
அத்தருணத்திலிருந்து, எமது நாட்டின் தலைவிதியினை வடிவமைப்பதற்கு மரைன் படையினர் உதவியுள்ளனர். நியூ ஓர்லியன்ஸ் போரில் ஆண்ட்ரூ ஜாக்சனுடன் இணைந்து அவர்கள் போராடினர், ‘டெவில் டோக்ஸ்’ என்ற புனைப்பெயரை அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்த, பெல்லவ் வுட்டில் இடம்பெற்ற முதலாம் உலகப் போரின் அகழிகளில் உறுதியாக நின்றனர், மற்றும் குவாடல்கனல், இவோ ஜிமா மற்றும் ஒகினாவா போன்ற பசிபிக் பிராந்தியம் முழுவதும் வெற்றி மேல் வெற்றியைப் பெற்றுக்கொண்டனர்.
அவர்கள் கொரியாவிலும் வியட்நாமிலும் கம்யூனிசத்தை எதிர்கொண்டனர், பாரசீக வளைகுடாவில் சுய ஆட்சிக்கான உரிமையை நிலைநாட்டினர், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரில் பாலைவனங்களிலும் மலைகளிலும் எமது எதிரிகளுக்கு நீதியை வழங்கினர்.
மரைன் படை வீரர்கள் வெளிநாடுகளிலுள்ள எமது தூதரகங்களைப் பாதுகாக்கிறார்கள், மற்றும் எமது சமஷ்டி சட்ட அமுலாக்கப் பிரிவுகள் இங்கு உள்நாட்டில் தமது பணிகளைச் செய்ய முடியும் என்பதை உறுதி செய்கிறார்கள். சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம், மரைன் படையினர் வலிமை, துணிச்சல் மற்றும் அடிபணியாத கெளரவத்துடன் பதிலளித்துள்ளனர்."

