Jan 4, 2026 - 07:37 AM -
0
வெனிசுலாவில் அமெரிக்கா முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நாளை (05) அவசரக் கூட்டமொன்றைக் கூட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்க இராணுவத்தால் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐநா தலைமையகத்தில் உள்ள 15 நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்கும் இக்கூட்டம், அந்நாட்டு நேரப்படி நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் வெனிசுலா வெளிவிவகார அமைச்சர் இவான் கில் ஆகியோர் விடுத்த அவசர கோரிக்கையைத் தொடர்ந்தே ஐநா பாதுகாப்புச் சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் குறிப்பிடுகின்றன.

