Jan 7, 2026 - 12:34 PM -
0
கிட்டத்தட்ட நான்கு வருட ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய சேவைக்குப் பிறகு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஜனவரி மாதம் 16ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்வார். கொழும்பில் அமெரிக்காவின் அதியுயர் இராஜதந்திரியாகப் பணியாற்றிய அவரது பதவிக் காலத்தின் நிறைவினை அது குறிக்கிறது.
“இலங்கையில் கழித்த ஒவ்வொரு தருணங்களையும் நான் விரும்பினேன்.” எனக்கூறிய தூதுவர் சங், “முதலாவது நாளிலிருந்தே எமது பாதுகாப்புப் பங்காண்மைகளைப் பலப்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல் மற்றும் எமது இரு நாடுகளையும் வலிமையாக்கும் கல்வி மற்றும் ஜனநாயக விழுமியங்களை ஊக்குவித்தல் போன்ற அமெரிக்க நலன்களை மேம்படுத்துவதில் நான் கவனம் செலுத்தினேன். அமெரிக்க மக்களுக்கு நல்ல முடிவுகளை வழங்குகின்ற மற்றும் சுதந்திரமான, திறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினை ஆதரிக்கும் ஒரு உறவினை ஒன்றிணைந்து நாம் கட்டியெழுப்பியுள்ளோம்.” எனவும் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரம்பித்த தூதுவர் சங் அவர்களின் பதவிக்காலமானது, 2023 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு, 2024ஆம் ஆண்டில் அமெரிக்க பீஸ் கோர் தொண்டர்கள் இலங்கையில் மீண்டும் தமது சேவையினை ஆரம்பித்தது, மற்றும் ஃபுல்பிரைட் நிகழ்ச்சித் திட்டத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல மைல்கற்களை உள்ளடக்கியிருந்தது. 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் LEED Gold சான்றிதழ் வழங்கப்பட்ட புதிய வளாகத்திற்கு தூதரகம் இடம் மாறியதையும் தூதுவர் சங் மேற்பார்வையிட்டார். அது இலங்கையில் நிலைபேறான, பாதுகாப்பான மற்றும் நீடித்த இருப்புக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு அடையாளமாகும். அத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் எதிர்காலத்திற்காக ஒரு நவீன பங்காண்மையினைக் கட்டியெழுப்புவதில் அமெரிக்கா கொண்டுள்ள கவனத்தையும் அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தூதுவர் சங் அவர்களின் தலைமையின் கீழ், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவி செய்வதற்காக குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளை அமெரிக்கத் தூதரகம் முன்னெடுத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிகளுக்காக அமெரிக்கா வழங்கிய ஆதரவு மற்றும் இலங்கையின் உணவுப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக அமெரிக்க விவசாயத் திணைக்களம் வழங்கிய உதவித் தொகுப்புகள் மற்றும் மிகச்சமீபத்தில் 2025 டிசம்பர் மாதத்தில் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான பதிலளிப்பு நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் வழங்கிய மனிதாபிமான உதவிகள் என்பன அவற்றுள் உள்ளடங்குகின்றன.
2022ஆம் ஆண்டு முதல் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் சுதந்திரம், செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உதவியாக இலங்கைப் பங்காளர்களுடனான ஈடுபாட்டினையும் தூதுவர் வழிநடாத்தினார். தூதுவர் சங் அவர்களின் பதவிக்காலத்தில், மொன்டானா தேசிய காவல் படையணி மற்றும் இலங்கையின் பாதுகாப்பமைச்சு ஆகியவற்றிற்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் CARAT, ATLAS ANGEL, மற்றும் Pacific Angel போன்ற பிராந்திய பாதுகாப்பு மற்றும் பேரனர்த்தங்களுக்கான பதிலளிப்பு தொடர்பான பயிற்சிகள் ஆகியவற்றினூடாக அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பினையும் தூதரகம் ஆழப்படுத்தியது. இலங்கையின் மிகப்பரந்த கடல்சார் களத்தினைப் பாதுகாக்கும் திறனை பலப்படுத்தும் வகையில், ஒரு Beechcraft King Air விமானம் மற்றும் இரண்டு முன்னாள் அமெரிக்க கடலோர காவற்படைக் கப்பல்கள் உள்ளிட்ட முக்கியமான கடல்சார் பாதுகாப்பு உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டதையும் தூதுவர் சங் மேற்பார்வையிட்டார். பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை ஆகிய விடயங்களில் வேரூன்றிய ஒரு பங்காண்மையினை கட்டமைப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டினை மீளவலியுறுத்தும் இம்முயற்சிகள் ஊடாக பிராந்திய கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடனான அமெரிக்காவின் ஒத்துழைப்பினை தூதுவர் மேம்படுத்தினார்.
தூதுவர் சங் அவர்களின் பதவிக்காலத்தில் இளைஞர் மற்றும் கல்வி தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள் செழித்து வளர்ந்தன. 2024 ஆம் ஆண்டில் பீஸ் கோர் தனது பணிகளை உத்தியோகபூர்வமாக இலங்கையில் மீண்டும் ஆரம்பித்தது. மட்டக்களப்பில் திறக்கப்பட்ட அமெரிக்கத் தகவல் கூடம் மற்றும் திருகோணமலையில் ஒரு ஆங்கில மொழி ஆய்வு கூடம் போன்ற புதிய வசதிகள் ஊடாக அமெரிக்க கலாச்சார மற்றும் கல்வி ரீதியான தொடர்புகள் வளர்ந்தன. தூதரகத்தின் இளைஞர் மன்றம், இளம் தெற்காசிய தலைமைத்துவ முன்முயற்சி (YSALI) மற்றும் English Access போன்ற நிகழ்ச்சித் திட்டங்கள் இலங்கையின் அடுத்த தலைமுறை தலைவர்களைத் தொடர்ந்தும் வலுவூட்டுகின்றன.
கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியத்தின் ஊடாக ஹம்பாந்தோட்டைக்கு அருகேயுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொடவாய கப்பற் சிதைவினைப் பாதுகாப்பதற்கு உதவி செய்து, கலாச்சார பாரம்பரியத்தினையும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ஈடுபாட்டின் ஒரு அங்கமாக தூதுவர் சங் உயர்த்தினார். அமெரிக்க-இலங்கை மூலோபாய பங்காண்மையினை பலப்படுத்தி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் அதே வேளையில், பகிரப்பட்ட வரலாற்றைப் பாதுகாப்பதில் அமெரிக்கா வழங்கும் தலைமைத்துவத்தினை இம்முயற்சிகள் பிரதிபலித்தன.
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நீடித்த தூதுவர் சங் அவர்களின் பதவிக்காலத்தில் இடப்பட்ட பலமான அடித்தளத்தின் மீது இலங்கையுடனான தனது பங்காண்மையினைத் தொடர்ந்தும் கட்டியெழுப்புவதற்காக இலங்கை அரசாங்கத்துடனும் அதன் மக்களுடனும் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதில் அமெரிக்கா உறுதியுடன் உள்ளது. ஒரு புதிய அமெரிக்கத் தூதுவர் வருகைதரும் வரை தூதரகத்தின் பிரதிப் பிரதானியான ஜேன் ஹொவெல் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராகப் பணியாற்றுவார்.

