Header Logo
Mogo Academy

கிழக்கு
வாக்குறுதிகளில் 33 வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றம்

Jan 26, 2026 - 05:05 PM -

0

வாக்குறுதிகளில் 33 வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றம்
Mobitel inner

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்குவந்து ஒரு வருடத்திலேயே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் 33 வீதமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் வரவு செலவு திட்டத்தில் கடந்த காலத்தில் ஒதுக்கிய நிதிகள் முழுமையாக மக்களுக்கு செலவளிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

செலவளிக்கப்பட்டநிதிகளில் எந்தவிதமான ஊழல்களும் நடைபெறவில்லையென்றும் எமது ஆட்சியில் ஊழல்வாதிகளுக்கு எந்த இடமும் வழங்கப்படாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகள் அற்ற மக்கள் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் வீடுகளை திருத்துவதற்குமான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (26) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. 

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள மக்கள் வீடு ஒன்றை அமைப்பதற்கும் மிக மோசமான நிலையில் உள்ள மக்கள் தமது வீடுகளை திருத்திக்கொள்வதற்குமாக தொடர்ச்சியாக உதவிகளை வழங்கிவருகின்றது. 

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் ஞா.சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. 

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் செல்வி யதுஷாயினியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை வழங்கிவைத்தார். 

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் ஞா. சுகுமாரன், அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எஸ். ஜோன்ஸ், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் வறிய நிலையில் உள்ள 703குடும்பங்களுக்கு இந்த நிதியுதவிகள் கட்டம்கட்டமாக வழங்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையினர் தெரிவித்தனர். 

இதன்போது கருத்து தெரிவித்த கந்தசாமி பிரபு, 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் இறுதிக்கட்டத்தினை அடைந்து அதனை மக்களிடம் கையளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

2025 ஆம் ஆண்டு எங்களது முதலாவது வரவு செலவு திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பலவேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. 

இதேபோன்று 2026 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டம் ஊடாகவும் உட்கட்டமைப்புக்கு என பல மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளோம். வீடமைப்பு திட்டம் ஊடாகவும் கிராமத்திற்கு ஒரு வீடு என்ற திட்டத்தின் ஊடாகவும் பலவேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதேபோன்று கிழக்கு மாகாணசபைக்கூடாக ஒதுக்கப்பட்ட நிதிகள் ஊடாகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கடந்த ஆட்சிக்காலத்தில் ஆட்சிசெய்தவர்கள் ஊடாக வீடமைப்புக்கு வழங்கப்பட்ட நிதியென்பது மிகவும் குறைந்ததாகவேயிருந்தது. ஆனால் ஒட்டுமொத்தமாக கடந்த வருடம் மட்டும் நாங்கள் 142 மில்லியனை வீட்டுத்திட்டத்திற்காக வழங்கியிருக்கின்றோம். இதேபோன்று இந்த ஆண்டும் அதிகளவான நிதியினை இந்த வீட்டு திருத்திற்கு என வழங்குவதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம். 

மக்களின் வரிப்பணம் திறைசேரிக்கு கொண்டுசெல்லப்பட்டு இவ்வாறான செலவுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த வருடம் 1200 ரில்லியன் ரூபா திறைசேரியில் சேர்க்கப்பட்டிருந்தது. கடந்த ஆட்சிக்காலத்தில் இதற்கு அதிகமான தொகை திறைசேரியில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அது தமது சொந்த நலனுக்காகவும் குடும்பங்களுக்காகவும் அவர்களின் சகாக்களுக்காகவுமே செலவளிக்கப்பட்டிருந்தது. மக்களுக்கு அவற்றினை கொண்டுசேர்க்கமுடியாத அரசாங்கமாகவே கடந்த காலத்திலிருந்தார்கள். 

நிதிகளை வீணடித்திருந்தார்கள், ஊழல்மோசடிகளில் ஈடுபட்டிருந்தார்கள், அபிவிருத்தி என்ற போர்வையில் காசை தமது பொக்கட்டுகளில் போட்டுக்கொண்டதையே கடந்தகாலத்தில் காணமுடிந்தது. 

ஆனால் இன்று இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் மேல்மட்டங்களில் இருந்த ஊழல்வாதிகளை இல்லாமல்செய்திருக்கின்றோம், ஊழல்மோசடிகளை குறைத்திருக்கின்றோம். புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றோம். 

2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த நாடு வங்குறோத்து அடைந்த நாடாக மாற்றப்பட்டிருந்தது. அன்றைய ஆட்சியாளர்கள் நிதிகளை தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி நிதிகளை வீணடித்தகாரணத்தினால் நாடு வங்குரோத்து நிலையினை அடைந்தது. 

இதன்போதே நாட்டினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொறுப்புடனும் மிகுந்த அக்கறையுடனும் ஒவ்வொரு திட்டத்தினையும் முன்னெடுத்து வருகின்றார். 

அண்மையில் வடமாகாணத்திற்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார். வடமாகாணத்தில் கைவிடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீளுறுவாக்கம் செய்வதற்கான நிதிகளை ஒதுக்கியிருக்கின்றார்.பல தொழிற்சாலைகளை இயங்கச்செய்திருக்கின்றோம். 

இன்று ஜனாதிபதிக்கு வடமாகாண மக்கள் அதிக அன்பினையும் ஆதரவினையும் வழங்குகின்றார்கள். சுதந்திரமாக வடமாகாணத்தில் நடைபயணம் செய்த ஒரேயொரு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மட்டும்தான். அந்தளவுக்கு தமிழ் மக்கள் அவர் மீது அக்கறைகொண்டிருக்கின்றார்கள்.இந்த அரசாங்கம் எப்போதும் மக்கள் நேயமிக்க அரசாங்கமாகவே இருக்கும்.மக்கள் மீது அக்கறைகொண்ட அரசாங்கமாகவே இருக்கும். 

கடந்த காலத்தில் ஒரு மக்கள் பிரதிநிதி எந்தளவு மக்கள் பணத்தினை வீணடிக்கமுடியுமோ அந்தளவுக்கு வீணடித்திருக்கின்றார்கள்.நாங்கள் மக்கள் பணத்தினை வீணடிக்காமல் மக்களுக்கு கொண்டுசெல்லும் செயற்பாட்டினையே முன்னெடுப்போம். 

இதேபோன்று இனவாத ரீதியாக சிந்திக்கும் ஆட்சியாளர்கள் இந்த தேசிய மக்கள் சக்தியில் இல்லை. அனைவருக்கும் கிடைக்கவேண்டிய விடயங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக தேசிய மக்கள் சக்திசெயற்படும் என தெரிவித்தார்.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara