கிழக்கு
புதிய கல்வி சீர்திருத்தத்தினூடாக மாற்றங்களை உருவாக்குவோம்!

Feb 2, 2026 - 10:40 AM -

0

புதிய கல்வி சீர்திருத்தத்தினூடாக மாற்றங்களை உருவாக்குவோம்!

"நாட்டில் ஒரு புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டது போல, புதிய கல்விச் சீர்திருத்தத்தினூடாகத் துறையிலும் பாரிய மாற்றங்களை உருவாக்கவுள்ளோம். இந்த புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு அதன் நோக்கம் குறித்த சரியான புரிதல் இல்லை" என பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். 

மட்டக்களப்பில் தனியார் விடுதி மண்டபத்தில் நேற்று (01), Aaro 360 நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தேவநாயகம் நிறோசன் தலைமையில் இடம்பெற்ற 'Aaro 360' டிஜிட்டல் செயலியை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு உரையாற்றிய அவர், 

எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைக் பொறுப்பேற்பதற்கு முன்னர், இந்நாடு ஊழல் மோசடிகள் நிறைந்ததாகக் காணப்பட்டது. தற்போது நாங்கள் இந்த ஊழல் மற்றும் லஞ்சங்களை வெகுவாகக் குறைத்து வருகிறோம். ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. விரைவில் நாட்டில் ஊழல் மோசடிகளை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். 

தொழில்நுட்ப ரீதியான டிஜிட்டல் மயமாக்கல் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையாகும். எமது அரசாங்கம் 'டிஜிட்டல் பொருளாதாரம்' எனும் அமைச்சினை உருவாக்கி அதன் மூலம் பல நற்காரியங்களை முன்னெடுத்து வருகின்றது. விசேடமாக, 'GoPay' போன்ற செயலிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். 

தற்போது பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறே அரச துறைக்கான கட்டணங்களைச் செலுத்தி, சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை எமது அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களைக் கூட வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பொலிஸாரின் தண்டப்பணங்களைச் செலுத்துவதற்கும் டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

எமக்கு அண்மையிலுள்ள இந்தியா போன்ற நாடுகள், புதிய தொழில்நுட்பங்கள் ஊடாகச் சேவைகளை விஸ்தரித்துள்ளன. அந்த நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண்பதற்கு இத்தொழில்நுட்பமே முக்கிய பங்காற்றுகிறது. அதேபோன்று, நாமும் இவ்வாறான தொழில்நுட்ப முறைமைகளைக் கையாண்டு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். 

இன்று எமது அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தம் ஒரு பேசுபொருளாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைப் போல, கல்வி முறையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதே எமது அரசின் இலக்காகும். 

உலகளாவிய ரீதியில் வளர்ந்த நாடுகளின் முன்னேற்றத்திற்கு அவர்களின் கல்வித்துறையே முதுகெலும்பாக இருந்துள்ளது. கடந்த கால அரசாங்கங்கள் பல கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய போதும், அவை தோல்வியிலேயே முடிந்தன. ஆனால், எமது பிரதமரின் தலைமையில் உருவாக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தம் நவீன முறைமைகளை உள்ளடக்கியுள்ளது. 

வெறும் மனப்பாட முறை மூலம் பரீட்சை எழுதி சித்தியடைபவர்கள், வேலைவாய்ப்புச் சந்தையில் இலக்கை அடைய முடியாமல் தடுமாறுகின்றனர். ஆனால், எமது புதிய சீர்திருத்தம் ஒரு மாணவர் கல்வியை முடித்து வெளியேறும்போது, ஒரு தொழில் வல்லுநராக வெளியேற வழிவகுக்கும். இந்தச் சீர்திருத்தத்தை எதிர்ப்பவர்கள் அதிலுள்ள சொற்பதங்களை வைத்து விமர்சிக்கின்றனரே தவிர, அவர்களுக்கு அதன் ஆழமான புரிதல் இல்லை. எனவே, இந்த நல்ல மாற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபை உறுப்பினர்களான மு.துதீஸ்வரன், செல்லப்பெருமாள் வனிதா மற்றும் 'Aaro 360' நிறுவன அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05