Feb 6, 2026 - 09:08 AM -
0
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட முத்தரப்புப் கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுற்று நேற்று (05) நிறைவடைந்தது. இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் பாரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், போரின் பிரதான பேசுபொருட்களான போர் நிறுத்தம் மற்றும் நிலப்பரப்புப் பகிர்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தமது நாட்டின் கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், நீண்டகால அமைதியை நிலைநாட்டும் நோக்குடன் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டதாக உக்ரைன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மத்தியஸ்த நாடுகளாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வரும் பங்களிப்பிற்கும் உக்ரைன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த கலந்துரையாடல்கள் சாதகமாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரஷ்ய ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இக்கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட முன்னேற்றங்கள் குறித்த உத்தியோகபூர்வ விபரங்கள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முதலாம் கட்ட கலந்துரையாடல் கடந்த ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் அபுதாபியில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

