Feb 12, 2026 - 11:13 AM -
0
பங்களாதேஷில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையிலான 18 மாத கால இடைக்கால அரசாங்கத்தின் பின்னர் நடைபெறும் இத்தேர்தல் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மொத்தம் 350 ஆசனங்களைக் கொண்ட பங்களாதேஷ் பாராளுமன்றத்தில், 299 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெறுகின்றன. ஒரு தொகுதியில் வேட்பாளர் ஒருவரின் மரணம் காரணமாக அங்குத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 ஆசனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதாசார அடிப்படையில் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.
இத்தேர்தலில் தாரிக் ரகுமான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவுகின்றது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்பிற்குக் காரணமாக இருந்த மாணவர் இயக்கம், ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 9 இலட்சத்து 58 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 42,779 வாக்குச்சாவடிகளில் 90 சதவீதமான இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்பட்டுள்ளன.
தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். டாக்கா-17 தொகுதியில் போட்டியிடும் பி.என்.பி தலைவர் தாரிக் ரகுமான் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷபிகுர் ரகுமான் ஆகியோர் தமது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
வாக்குப்பதிவின் போது சில இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டது. போகுரா பகுதியில் வாக்குச்சாவடிக்கு அருகில் பி.என்.பி கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் மிலோன் மியா கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அதேவேளை, பரிசால், பாபுகஞ்ச் பகுதியில் பணம் மற்றும் தேர்தல் சீட்டுகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் கலிதா ஜியாவின் மறைவுக்குப் பின்னர், அவரது புதல்வர் தாரிக் ரகுமான் 17 ஆண்டுகளின் பின்னர் லண்டனிலிருந்து நாடு திரும்பி இத்தேர்தலில் போட்டியிடுகின்றமை விசேட அம்சமாகும்.
இன்று மாலை 4.30 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவடையவுள்ள நிலையில், உடனடியாக வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும், முழுமையான தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 84 அம்ச ஜனநாயக சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 'ஜூலை தேசிய சாசனம் 2025' மீதான மக்கள் வாக்கெடுப்பும் இத்தேர்தலுடன் இணைந்ததாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

