Feb 21, 2026 - 10:27 AM -
0
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு லெபனானில் இருந்து பதிலடி தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து, லெபனானையும் இஸ்ரேல் கடந்த காலத்தில் தாக்கியது.
இதன்பின்னர் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, அமைதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தியது.
ஆனால், சமீப நாட்களாக லெபனானை குறி வைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் சிக்கி லெபனானில் 12 பேர் பலியாகி உள்ளனர். 24 பேர் காயமடைந்தனர்.
லெபனானில் பெகா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கட்டளை மையங்கள் செயல்பட்டன. அவற்றை தாக்கினோம் என இஸ்ரேல் தெரிவித்தது.
இதில், குடியிருப்பு கட்டிடம் ஒன்று தாக்கப்படும் காட்சியும், இடிபாடுகளுக்குள் சிக்கியோரை அவசரகால பணியாளர்கள் மீட்க போராடும் வீடியோ காட்சியும் வெளியாகி உள்ளது.
இதேபோன்று சிடோன் நகரில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். இதனை ஹமாஸ் அமைப்பு ஒப்பு கொண்ட போதிலும் கட்டளை மையம் மீது தாக்குதல் இல்லை என்றும் அந்த கட்டிடம் பாலஸ்தீனியத்தின் பல்வேறு குழுக்கள் தங்கியிருந்த கட்டிடம் என்றும் தெரிவித்தது.
சமீபத்தில், லெபனானின் தெற்கே ஹிஸ்புல்லா பயங்கரவாத உள்கட்டமைப்பை நிறுவும் முயற்சில் ஈடுபட்ட பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்கி வீழ்த்தினர்.
இதுதவிர, அந்த பகுதியில், பயங்கரவாத சதி திட்டங்களை ஊக்குவிக்கும் வகையிலான பல்வேறு கருவிகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களும் தாக்கி அழிக்கப்பட்டன.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வை மீறும் வகையில் அந்த பயங்கரவாதியின் செயல்பாடுகள் இருந்தன என இஸ்ரேல் தெரிவித்தது.
அதற்கு சில நாட்களுக்கு முன்பு, லெபனானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை மீண்டும் உருவாக்கும் பணியில் ஈடுபட்ட ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் 3 பேரை 91-வது படை பிரிவை சேர்ந்த வீரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

