Header Logo
SLIC
கிழக்கு
தமிழ் கிராமங்களை சிங்கள கிராமங்களுடன் இணைக்க தீர்மானம்?

Feb 24, 2026 - 05:46 PM

தமிழ் கிராமங்களை சிங்கள கிராமங்களுடன் இணைக்க தீர்மானம்?
Mobitel Inner 1278
EDEX Inner

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். 

இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு இன்று (24) பிற்பகல் விஜயம் மேற்கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச செயலாளர் இரங்கநாதனுடன் கலந்துரையாடினார். 

இந்த சந்திப்பில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

இதன்போது எல்லை நிர்ணய சபையினால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள கிராமங்களுடன் இணைப்பதற்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இனப்பரம்பலை மாற்றுவதற்கான முயற்சிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

இவ்விடயம் தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக, இன்று நான் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் சந்திக்க பிரதேச செயலகத்திற்குச் சென்றேன். இச்சந்திப்பில் போரதீவுப்பற்று தவிசாளர் கௌரவ வி. மதிமேனன், பிரதேச சபை உறுப்பினர்கள் அ. பிறேமாகரன், ம. கோபிநாத், கா. யோகராசா மற்றும் தே. ஜேனுகா ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இதுதொடர்பாக எந்தவித தகவலும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என பிரதேச செயலாளர் தெரிவித்தார். எல்லை நிர்ணயம் தொடர்பாக சில இடங்களில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தாலும், குறிப்பிட்ட கிராமங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கும் அறிவிக்காமல், மட்டக்களப்பின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப் பிரிவுகளுடன் இணைப்பதற்கான கூட்டம் நடைபெற்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. 

இதில் சில முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தின் சிங்கள கிராமங்களுடன் இணைப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 25 ஆம் கொலணி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட குமாரிகம கிராமத்தையும் இணைத்து, 'சமகிபுர' என்ற புதிய கிராமத்தை உருவாக்கி அம்பாறை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருதல். மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராணமடு கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட சுகதகம கிராமத்துடன் இணைத்தல் ,மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தையும், அம்பாறை உகன பிரதேசத்திற்குட்பட்ட கோணகல கிராமத்துடன் இணைத்தல் போன்ற திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
Mobitel 1278